Saturday, February 16, 2008

அறவாழி அந்தணன்

அறவாழி அந்தணன்

மலர்மிசை ஏகினான் என்ற கட்டுரையை எழுதிய போது தனிப்பட்ட மடல்கள் நிறைய வந்தன. சில பாராட்டியும் சில எதிர்த்தும் வந்தன. ஒரு அன்பர் அறவாழி அந்தணன் என்ற தொடர் அருகனுக்கு எவ்வாறு பொருந்தும் என்று எதிர்க் கேள்வி கேட்டிருந்தார். திருக்குறளில் ஒரு சில குறட்பாக்கள் சமணத்தைக் குறித்திருந்தாலும் சில குறட்கள் சமணத்துக்கு பொருந்துவதாக இல்லையே? என்று தமது மடலில் குறித்திருந்தார். அவர் மேலும் ‘அறவாழி அந்தணன்” என்ற சொற்றொடரில் இருக்கும் “அந்தணன்” என்ற சொல் எப்படி அருகனைக் குறிக்கும்? என்று வினவியிருந்தார். அவருக்கு பதில் மடல் எழுதியக் கையோடு எழுத ஆரம்பித்தக் கட்டுரைத் தான் இது!

அறவாழி

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது” - திருக்குறள் (8)

மேலே கூறப்பட்ட குறளில் வரும் “அறவாழி அந்தணன்” என்றத் தொடர்தான் இங்கு விவாதப் பொருளாக்கப்பட்டு வந்திருக்கிறது. இச்சொற்றொடருக்கு பொருள் என்ன?

1. அறவாழி அந்தணன் - அறக் கடலாகிய அந்தணன் என்று ஒன்றும்,
2. அறவாழி அந்தணன் - அறச் சக்கரத்தை உடைய அந்தணன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.

ஆனாலும் மேலே சொன்ன குறளுக்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும் என்பதைப் பொருத்தே அந்த குறளின் முழுப் பொருளையும் உணர்ந்துக் கொள்ள முடியும்.
முதலாவது எடுத்துக்கொள்வோம். அறவாழி = அறக்கடல் என்று பொருள் கொண்டால்; அறக்குணத்தைக் கொண்ட அந்தணனை (கடவுளை) பற்றினால் (புணை) பிற (மற்ற) கடல்களை நீந்துதல் எளிது. இதையே புரியும்படி எழுதுகிறேன்.
“ அறக்கடலாகிய அந்தணனனை பற்றினால் பிறத்தலாகிய கடலைக் கடக்கலாம் என்றும் அப்படி பற்றாதவர்க்கு பிறவு ஆழியைக் கடப்பதன்பது அரிதாம்’.

இது பொருந்தாதாம் எப்படி?

அந்தணனை (கடவுளை) அறக்கடலாக உருவகித்தால் அவர் பாதத்தை எப்படி புணையாக அல்லது தெப்பமாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கடலை உருவகித்து கடலைக் கடக்கச் சொல்வது என்பது பொருள் குற்றம். பொருந்தாது என்னை?

சரி. இரண்டாவதுப் பொருளை எடுத்துக்கொள்வோம். அறவாழி = அற சக்கரம் என்று பொருள் கொண்டால்; அற சக்கரத்தை உடைய அந்தணனை (கடவுளை) பற்றினால் பிறவிக் கடலைக் கடக்கலாம். அஃதாவது,

“தர்ம சக்கரத்தையுடைய அந்தணனின் தாள் பற்றினால், பிறவிக் கடலைக் கடக்கலாம் என்றும் அப்படி பற்றாதவர்களுக்கு அக்கடலைக் கடக்க முடியாது என்பதாம்”

இங்கே அற சக்கரத்தையுடைய அந்தணனின் தாள் புணையாக உருவகித்தால், பிறவாழி; பிறவியாகிய கடலை நீந்திக் கரையேரலாம் என்பது பொருத்தமாக இருக்குமன்றோ!

இது நிற்க!

அந்தணன்

இக்குறளில் உள்ள அந்தணன் என்ற சொல் யாரைக் குறிக்கும்?
அந்தணன் என்ற சொல் வைதீக வேதியர்களைக் குறிக்கிறது என்று பலர் தவறாகப் பொருள் கொள்கிறார்கள். அப்படித்தான் அந்த அன்பரும் பொருள் கொண்டு என்னோடு மடலாடினார். அவர் மட்டுமன்று தமிழ்க் கற்ற பெரியோர்களையும் அச்சொல் மயக்கியே வந்திருக்கிறது.

அந்தணர் என்போர் அறவோர்

திருக்குறளில் நீத்தார் பெருமையென்னும் அதிகாரத்தில் 30ஆவது குறள்,

“அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்”

அறவோரே அந்தணர்; அத்தோடு இல்லாமல் எந்த உயிருக்கும் ஒரு தீங்கும் செய்யாதவரே அந்தணர் என்று அழுத்தம் திருத்தமாக குறள் குறித்திருக்கிறது. அஃதாவது, யாரொருவர் எந்த உயிர்களுக்கு தீங்கு செய்யாமல், அவற்றை யாதொன்றையும் கருதிக் கொல்லாமல் இருக்கிறாரோ அவரே அந்தணர் என்றுப் போற்றப்படுகிறார். இது யான் சொல்லவில்லை. அந்தக் குறள் அப்படித்தான் அந்தணருக்கு இலக்கணம் வகுத்திருக்கிறது. என்னை?

இதனால் அந்தணர்கள் எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாதவர்கள் என்பது அங்கை நெல்லிக்கனி!

அந்தணர் என்ற சொல் அக்காலத்தில் (குறள் எழுந்தக் காலக்கட்டத்தில்) நிச்சயம் வைதீக பிராமணர்களைக் குறித்திருக்காது என்பது நிதர்சனம். அக்கால வைதிகர்கள் வேத யாகங்களில் மிருகங்களை பலியிட்டிருக்கிறார்கள்.(பார்க்க: நீலகேசி) இதனால் அந்தணன் என்ற சொல் அவர்களைக் குறிக்கவில்லை என்பது பெறப்படுகிறது.

ஈண்டு முக்கியமான ஒன்றை குறித்துக் கொள்ளவேண்டுகிறேன். அந்தணன் என்றால் அது வைதிக பிராமணனைத் தான் குறிக்கும் என்று எடுத்துக் கொண்டால், அப்பகுப்பு முறை ( வருண வேறுபாடு) மனிதர்களுக்கு மட்டுமே உரியது. இறைவன் எல்லாவற்றையும் கடந்தவர். அவரை அந்தணரோடுத் தொடர்புப்படுத்த முடியாது. இல்லையா?

அறவாழி அந்தணன்

அற சக்கரத்தையுடைய அல்லது தரும சக்கரத்தையுடைய அருகக் கடவுளின் தாளை பாதத்தை பற்றாதவர்களுக்கு பிறவியாகிய கடலை (சம்சார கடலை) கடப்பதன்பது அரிது. இதுவே நேரிதன் உரை. உண்மையான பொருளும் கூட.
இங்கே தர்ம சக்கரத்தை உடைய அருகனின் பாதத்தை புணையாக உருவகித்து, பிறவியைக் கடலாக உருவகித்தால் அந்தக் குறளின் பொருளை நன்கு பருகலாம்.

தர்ம சக்கரம் (அறவாழி)

அருகப் பெருமான் எண்வகை சிறப்பை உடையவர்.

1. அசோக மரம் (பிண்டி)
2. தேவரின் மலர் பொழிவு (மலர் துவுதல்)
3. திவ்வியத் தொனி ( உதடுகள் அசையாமல் வரும் ஒலி)
4. சாமரம்
5. சிம்மாசனம் (அரியாசனம்)
6. தருமச் சக்கரம்
7. ஒளி மண்டலம்
8. முக்குடை

மேலே சொல்லப் பட்ட எட்டு சிறப்புகளில் தருமச் சக்கரமும் ஒன்று. (புத்தபிரானுக்கும் இக்குறள் பொருந்தும்)

இலக்கிய ஆதாரங்கள்

“தூண்டுதிண் டேருருள் போலச் சுழன்றுதொல் யோனிகட்கே
மீண்கொண் டேகுமவ் வெவ்வினைக் கஞ்சிநின் மெய்ச்சரணம்
பூண்டு கொண்டேனினிப் போகவொட் டேன்பொரு ளாகவென்னை
யாண்டுகொண் டாயற வாழிகொண் டேவென்ற வந்தணனே
- திருநூற்றந்தாதி (27)

“ஆதியங் கட்விள் அறவாழி அந்தணன்
அரியணைச் செல்வன் அருளாழி வேந்தன்”
- திவாகர நிகண்டு

“அருகன் எண்குணன் நிச்சிந்தன்
அறவாழி வேந்தன் வாமன்..”
- சூடாமணி நிகண்டு

அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்..”
- பிங்கல நிகண்டு

“மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோறியில்
பிறங்க வென்ற வென்றியோர் அனேகபேர்; உலகெல்லாம்
இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்
அறங்கள் நேமி* கொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே”
- திருக்கலம்பகம் (25)

(இப்பாடலின் பொருள் புரியவில்லை என்றால் கேளுங்கள் எழுதுகிறேன். ஏன்னென்றால், இப்பாடல் திருக்குறள் ஆராய்வோருக்கு மிக முக்கியமான ஒன்று. (* நேமி என்றால் சக்கரம்)

“களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்பர்
அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல்
விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே”
- சீவக சிந்தாமணி (1611)


இவ்வாறு நிறைய இலக்கிய சான்றுகள் காட்டலாம். முடிபாக, யான் நிறைய முறை சொன்னாற்போல் அருக பகவான், நம்மை போல் பிறந்து, உலக மக்கள் உய்ய நல்லறம் பகர்ந்தார். அவரே கொல்லாமை முதலிய அறங்களை பகர்ந்தார், ஆதலில் அந்தணன் என்ற சொல் அருகக் கடவுளைத் தவிர வேறு கடவுளுக்கு பொருந்தாது. ஆராய்ச்சி அறிஞர் மயிலையார் சொல்வார், அறவாழி அந்தணன் என்ற தொடர் மற்ற கடவுளர்களை, ஏன் திருமாலையும் குறிக்காது என்று சான்றுக் காட்டி எழுதியிருக்கிறார். அக்கட்டுரையைக் கீழே உள்ள வலைச்சுட்டியில் படிக்கவும்.


http://blog.360.yahoo.com/blog-IHs9FFYzeqhS6IL.5yu4wTp7Ww--?cq=1&p=11
http://www.treasurehouseofagathiyar.net/27800/27809.htm
http://www.treasurehouseofagathiyar.net/27900/27927.htm


இரா.பானுகுமார்,
சென்னை

Friday, January 25, 2008

இந்திரனே சாலும் கரி

இந்திரனே சாலும் கரி

திருக்குறளில் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில் வரும் குறளின் கடைசி அடி இவ்வாறு வரும் ‘இந்திரனே சாலும் கரி”. இந்தப் பாடலைப் படிக்கும் போதெல்லாம் எனக்குள் எழுந்தக் கேள்விகள் நிறைய என்றாலும் அவற்றுக்கு ஏனோ முக்கியத்துவம் கொடுக்காமலே இருந்து வந்தேன். சமீபத்தில் என் நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, இந்தப் பாடலைச் சொல்லி இதற்கு சமண விளக்கம் சொல்ல சொன்னார். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு திருக்குறள் ஒரு சமண நூல் என்பீர்களே இதற்கு என்ன விளக்கம் சொல்ல போகிறீர்கள் என்று கேட்டார். அவருக்கு அளித்த விளக்கத்தையே இங்கு கட்டுரையாகக் கொடுத்திருக்கிறேன். படித்துவிட்டு பின்னூட்டு இடுங்களேன்.

திருக்குறள் “நீத்தார் பெருமை” என்னும் அதிகாரத்தில் வரும் அந்தக் குறள் இதுதான்.

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும் புளார்கோமான்
இந்திரனே சாலும் கரி” - திருக்குறள் (25)

பரிமேலழகர் உரை

திருக்குறள் உரையாசிரியர்களில் சிறந்தவராகக் கருதப்படும் பரிமேலழகர் என்ன சொல்லியிருக்கிறார் என்று முதலில் பார்ப்போம்.

ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவனாகிய இந்திரனே அமையும் சான்று.

அவர் மேலும் விரித்து,

ஐந்தும் என்னும் முற்று உம்மையும், ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், ‘இந்திரனே சாலும் கரி’ என்றார்.
அவர் மேலும் விளித்து கெளதமர்க் கதையை இக்குறளுக்கு சான்றுக் காட்டிருக்கிறார்.

உரை ஆய்வு

“தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், ‘இந்திரனே சாலும் கரி’” என்ற அவரின் விரிவுரையை எடுத்துக் கொள்வோம்.

இவ்விரிவுரை பொருந்தாது எவ்வாறெனின், இந்திரன் ஐந்து புலன்களை அடக்காதது போலவும், அப்படி அடக்கிய முனிவரின் சாபத்திற்கு ஆளானான் என்பது போலவும் உரை வகுத்திருக்கிறார். “சாபம்” என்ற சொல் இங்கு தேவையில்லாதது. வலிந்துப் புகுத்தப்பட்டது என்றே கருதவேண்டியிருக்கிறது. இச்சொல், பின்னாளில் பல குழப்பத்திற்கும் காரணமாக அமைய வழிக்கோலிவிட்டது எனலாம். காட்டாக, கெளதமர் என்ற முனிவர் தன் மனையாளிடம், இந்திரன் தவறாக நடந்துக் கொண்டதிற்காக அவனுக்கு சாபமிட்டார் என்று இக்குறளுக்கு உரையெழுதியிருக்கிறார். இவர். இது பொருந்தாது!
ஏன் குறளும் அக்கதையும் பொருத்தமாகத் தானே இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு யான் சொல்வது இதுதான். மேலெழுந்தவாரியாகப் பார்த்தோமானால் அவ்வாறு தான் தோன்றும். இக்கதை உள் உண்மையை மறைக்கத் தோன்றிய கதை என்று துணிந்துக் கூறலாம்.

மணக்குடவர் உரை

நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று.
அவர் மேலும் தன் விரிவுரையில்,

இந்திரன் சான்றென்றது; இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால், அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

உரை ஆய்வு

இவ்வுரை பரிமேலழகர் உரையை விட சிறந்தது. நேரிதன் உரை வகுத்திருக்கிறார். இங்கு முற்றும் துறந்தவர் ஆற்றலைக் கண்டு இந்திரனும் அஞ்சுவான் என்பதை சான்றாக கருதுகிறார் உரையாசிரியர். இது சமண உரை. இதனாலேயே யான் இவ்வுரைச் சிறந்தது என்று கூறுகிறேன் என்று கருதவேண்டாம்.

என் விளக்கம்

ஒரு குறளின் பொருளையறிய அக்குறளின் உரையை மட்டுமில்லாது அது எந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டது என்பதையும் கருதிற்கொண்டால்தான், அந்த குறளின் உட்கருத்தை தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடியும். அதுவே சிறப்பாம். பரிமேலழகர் உரையாசிரியர்களில் சிறந்தவர் என்பதில் ஐயமில்லை. இது முற்றிலும் உண்மையும் கூட. ஆனால், இவரிடம் உள்ள ஒரு குறை. காய்த்தல், உவத்தல் அகற்றி உரை செய்யாமைதான்.

காலத்தால் முந்தையது மணக்குடவர் உரை. பரிமேலழகர் இவர் (மணக்குடவர்) உரையையே பெரிதும் தன் உரையில் தழுவி சென்றிருந்தாலும், எந்தெந்த குறளில் தன் சமயத்தைப் புகுத்த முடியுமோ, அங்கெல்லாம் தான் சார்ந்த சமயத்தைப் புகுத்தி உரைக் கண்டிருக்கிறார். அவ்வாறே இந்தக் குறளிலும் புகுத்தியிருக்கிறார் என்பது நிதர்சணம்.

அப்படியென்ன தன்னுடைய சமயத்தை புகுத்தியிருக்கிறார்? எனின்,

இந்த குறள் சொல்லப்பட்ட இடம் ‘நீத்தார் பெருமை”. ‘நீத்தார்’ என்பது ‘முற்றும் துறந்த முனிவர்’களைக் குறிப்பது. அஃதாவது, முற்றும் துறந்தவர்களுடைய பெருமை என்பது பொருள். அவ்வாறே, அந்த கருத்திலேயே அந்த அதிகாரத்தில் உள்ள மற்ற குறள்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. முற்றும் துறந்தவர் என்றால் யார்?

என்றால்! தன்னுடைய ஐந்து புலன்களால் வரும் நுகர்ச்சியாகிய ஆசையை அடக்கி அல்லது அவித்து, தன்னுடையது என்று ஏதும் இல்லாமல், உற்றாற்கு உடம்பும் மிகை என்பதுபோல் யாரொருவர் இருப்பாரோ அவரே முற்றும் துறந்த முனிவர். இவரிடம் விறுப்பு, வெறுப்பு, காழ்ப்பு போன்ற குணங்கள் அமையா. அப்பேர்ப்பட்டவர்களையே முற்றும் துறந்தவர் என்பது சாலப் பொருந்தும். அப்பேர்ப்பட்டவர்கள் யாருக்காவது சாபம் விடுவார்களா? என்பது முதற் கேள்வி. அப்படி சாபம் விட்டால் தன்னிலை தாழ்ந்தவர்கள் ஆகிறார்கள். அவர்களுக்கு நமக்கும் (இல்லறத்தார்) வித்தியாசம் இல்லாமற்போய்விடும். இல்லையா?

ஏன்யா? தன்னுடைய பொண்டாட்டியிடம் யாராவது வாலாட்டினால் எவராவதுப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? என்று யாராவது கேட்க கூடும்?

சும்மா இருக்க முடியாதுதான். அதற்கு யான் கூறும் சமாதானம் இதுவே. துறந்தவர் என்று நாம் யாரைச் சொல்கிறோம்? மனைவி, மக்கள், சுற்றம் இவர்களை ஒதுக்கியர்களைத்தான் துறந்தவர்கள் என்கிறோம். அதிலும், தன்னுடைய ஐந்து புலன்களையும் வென்றவர்களை “முற்றும் துறந்தவர்கள்” என்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும்போது மனைவியுடன் வாழ்ந்த கெளதம முனிவரை எப்படி முற்றும் துறந்தவர் என்று சொல்ல முடியும்? வெறும் ‘துறந்தவர்” என்றும் சொல்லமுடியாத போது முற்றும் துறந்தவர் என்று எப்படி கூறமுடியும்? என்னை?

குறளாசிரியரோ முற்றும் துறந்தவர்கள் பெருமையை சொல்லவருகிறார்? கெளதம முனிவர் துறந்தவரே அல்லர் அப்படியிருக்க கெளதம முனிவருடைய பெருமையை இக்குறள் கூறுகிறது என்பது எங்ஙனம் பொருந்தும்? சிந்திக்கவும்!

ஆதலால், முற்றும் துறந்தவர்கள் யாரையும் சாபம் விடமாட்டார்கள் என்பதம் அப்படி சாபம் விடுபவர்கள் முற்றும் துறந்தவர்கள் ஆகமாட்டார்கள் என்பதும் பெறப்படுகிறது. என்னை? அது நிற்க!

இன்னும் சிலருக்கு சந்தேகம் இருக்கக்கூடும் இல்லையா? கீழே வரும் சில குறட்பாக்கள் மூலம் அந்த சந்தேகங்களை களைய முயற்சிக்கிறேன்.

குறளாசிரியர் “துறவு” என்பதைப்பற்றி கூறுவதைக் காணலாம்.

“அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு” - 343

என்னுடைய உரை: துறவு என்பது என்ன? அடக்க வேண்டும் ஐந்து புலன்களையும் (புலன்களால் வரும் இச்சையை நுகர்ச்சியை), விட்டுவிட வேண்டும் எதையெல்லாம்? எது எது வேண்டும் என்று நினைக்கிறோமோ அவற்றையெல்லாம் விட்டுவிட வேண்டும். இங்கு ‘வேண்டிய’ என்பது மிகுபொருள் பொதிந்ததாம். மனைவி, மக்கள் (பிள்ளைகள்), சுற்றம், உறவினர் முதல் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் உட்பட அனைத்தையும் குறிக்கும்.

“தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்’ - 348

என்னுடைய உரை: தீரத் துறந்தவரே தலைப்பட்டார். தீர என்பது யான், எனது என்ற யாவற்றையும் துறந்தவரே தலைப்பட்டார். அஃதாவது வீடுபேறு பெறுவர் என்பதும் தீரத் துறக்காதவர்களுக்கு அப்பேறு இல்லையாம் என்பது கருத்து.
எனவே, அக்குறள் முற்றும் துறந்தவர்களின் பெருமை சொல்லவருகிறதே ஒழிய இல்லறத்தானின் பெருமையைச் சொல்ல வரவில்லை என்பதை நன்கறியலாம். இதனற்றான் யான் மணக்குடவர் உரை சிறந்தது என்று கூறலுற்றேன்!

சமணக் கருத்து

சமணக் கொள்கைப்படி இருவினையாகிய நல்வினையையும், தீயவினையையும் அகற்றினால்தான் வீடுபேறு கிட்டும். இறைவனாக விளங்க முடியும். இருவினை சேரா இறைவன் என்பதும் தேவர் வாக்கன்றோ? சமணத்தின்படி, உயிர்கள் தத்தம் வினைகளின்படி நான்கு கதிகளை அடையும். அவை மனிதக்கதி, தேவக்கதி, மிருகக்கதி, நரகக்கதி என்பனவாம். உயிர்கள் முறையே நல்வினை கட்டினால் தேவக்கதி, மனிதக்கதியையும், தீவினை கட்டினால் விலங்குக்கதி, நரகக்கதியையும் அடையும்.

இக்கதிகளில் மனிதக்கதியே சிறந்ததாம்! அரிதரிது மானிடராய் பிறத்தலரிது என்பது சமணப் பிராட்டி அவ்வை வாக்கு. மனிதக்கதியில் இருந்தே “சிவகதி”யடைய முடியும்; அஃதாவது வீடுபேறு அடைய முடியும் என்பது சமணக் கோட்பாடு. (சிலப்பதிக்காரத்தில் “சிவகதி நாயகன்” என்று அருக பகவான் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.)

இந்திரன்

தேவக்கதியில் பிறந்தவர்களை தேவர்கள் என்றும் அழைக்கிறது சமணம். இவர்களுக்கு தலைவன் ‘இந்திரன்” எனப்படுபவன். இங்கு இந்திரன் என்பது ஒருவர் அல்லர். தேவர்களில் தலைசிறந்தவர்களை ‘இந்திரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஆதலால், இந்திரப் பதவி என்பது நன்னடத்தை உள்ள ஒருவரே வகிக்க முடியும். இங்கு கூறப்படும் இந்திரன் வைதிக சமயத்தில் கூறப்படும் இந்திரன்போல் அல்லன். “சமண இந்திரன்” நன்னடத்தை உள்ளவன். காமுகன் அல்லன். மொழிக்கு இலக்கணம் படைத்த முனைவன். பேரறிஞன். இதனால் இந்திரன் பதவி என்பது நன்னெறியுள்ள உயிர்களுக்கே கிடைக்கும் பேறு.

இந்திரன் பணிதல்

சமண மரபுப்படி, எவர் ஒருவர் தம் ஐந்து புலன்களையும் தவமேற்றி “மெய்யுணர்வு” (வாலறிவு) பெறுகிறாரோ அப்போது இந்திரன் தன் அவதி ஞானத்தால் அறிந்து அவர் முன் மண்டியிட்டு வணங்குவான் என்பது கருத்து.

1. தேவக்கதி என்பது கிடைத்தற்கரியக் கதி. அவற்றிலும் இந்திரப் பதவி அடைவதென்பது பெரும்பேறு.
2. அப்பேற்ப்பட்ட பேறு பெற்ற இந்திரனே மனிதக்கதியில் பிறந்து முற்றும் துறந்துவர்களை வணங்கினான் என்றால் ‘முற்றும் துறந்தவர்” ஆற்றல் எத்தகையது என்பது சொல்லாமல் விளங்கும்!

இது தீர்த்தங்கரர்களுக்கும் பொருந்தும். எப்படியெனின்,

கடை கல்யாணம்

தீர்த்தங்கரர் வாழ்க்கையில் முக்கிய ஐந்து சம்பவங்களை பஞ்ச கலியாணங்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது சமணம். அவை முறையே, கர்ப்பாவதரண கல்யாணம், ஜன்மபிஷேக கல்யாணம், தீட்சாக் கல்யாணம், வேலாற்பத்தி கல்யாணம் மற்றும் பரிநிர்வாணக் கல்யாணம் என்பனவாம். இதில் தீர்த்தங்கர பகவான் வேலாற்பத்திக் கல்யாணம் என்னும் வாலறிவு பெறும்போது விசும்புலகில் உள்ள இந்திரனுடைய சிம்மாசனம் ஆடுமாம். இதனால், இந்திரன் தீர்த்தங்கர பகவான் வாலறிவு பெற்றதை உணர்ந்து, அவரைக் கண்டு அடிபணிந்து வணங்குவான் என்பதும் ஈண்டு நினைத்தற்பாலது.

எடுத்துக்காட்டாக,

“பயம்பகை பணித்த லார்வஞ் செற்றமே கவர்ச்சி சோகம்
வியந்திடல் வெகுளி சோபம் வேர்த்திடல் விரும்பல் கேதம்
மயங்குதல் தெளிதல் சிந்தை வருந்துதல் களித்தல் மாயம்
இயம்பருந் திறந்த வின்ன யாவையு மெறிந்தி ருந்தார்’
- மேருமந்தர புராணம் (1385)

உரை: இப்பாடல் முற்றும் துறந்தவர் இலக்கணத்தைச் சொல்கிறது.


“ ஆயிடை யமரர் தங்கண் முடியொடா சனந்து ளங்கப்
பாயநல் லவதி யென்னும் பருதியாற் கண்ட தெல்லாம்
ஆயிரங் கண்ணி னானை யதிபதி யாகச் சூழ்ந்து
மாயிரும் விசும்பும் மண்ணும் மறையவா னவர்கள் வந்தார்
- மேருமந்தர புராணம் (1386)

உரை: மேலே கூறப்பட்ட இயல்பைக் கொண்ட துறந்தார் முன், ‘ முடியுடன் - கீரிடமுடன், ஆசனமும் - இருக்கையும்’ சனந்து - ஆட அல்லது சலிக்க கண்டு அவதி ஞானத்தால் உணர்ந்து அவரைக் காண வந்தார்கள்.

மேலும்,

“அரம்பையர் நடம்பு ரிந்தா ரம்பர மரங்க மாக
.......
.......
யுரங்கடிந் திருந்த வீர ருறுதுணை யடிப ணிந்தார்”
- மேருமந்தர புராணம் (1388)

உரை: அப்படி அமரர்கள் சூழவந்த இந்திரன் அவர் இரண்டு பாதம் அடி பணிந்தான்.
என்று மேலே காட்டியப் பாடல் உரைக்கிறது.

இன்னுமொரு காட்டு,

“கேவல முற்பத்தி யாமள வேகிளர் பூசனைக் கென்
றேவலி யற்றுமவ் விந்திர னுகுமுன் னெண்குணத்தெங்
காவல னைக்கவிப் பார்வளைப் பார்முளைப் பார்களைப்போல்
மூவுல கத்துள்ள நால்வகைத் தேவரு முன்னுவரே”
- திருநூற்றந்தாதி (11)

உரை: எட்டு குணங்களையுடைய என்னை காப்பவராகிய தலைவருக்குக் கேவல ஞானமானது தோன்றிய பொழுது, நால்வகைத் தேவர்களும், அவர்களுடைய தலைவனான இந்திரனும் அவருக்கு சிறப்பு செய்ய முன்னுவரே - வருவரே என்பது பொருள்.

முடிபு

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும் புளார்கோமான்
இந்திரனே சாலும் கரி”

இந்தக் குறளில் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ‘அகல்விசும் புளார்கோமான் இந்திரனே” என்பது மேலுலகத்தின் கோமானான இந்திரனே என்று இந்திரனை உயர்த்தியே கூறப்பட்டிருக்கிறது. கோமான் என்று சிறப்படை மொழிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாற்றான் மனைவியை வஞ்சித்தானுக்கு கோமான் என்று சொல்வரோ? அவன் கயவன், காமுகன் அல்லவா? “அகல்விசும் புளார்கயவன் இந்திரனே” என்று தானே பாடியிருக்கவேண்டும். அவ்வாறில்லாமல் சிறப்பு அடைமொழி கொடுத்து ஏன் கூறவேண்டும்?. குறளாசிரியர் உட்கருத்து யாது என்றால், கிடைதற்கரிய பேறு பெற்ற இந்திரனைவிட, முற்றும் துறந்து, ஐந்து புலன்களை அடக்கியவர்களே சிறந்தவர்கள் என்றுக் காட்டவே, இந்திரனை சான்றுக் காட்டினார் என்றறிக!.


அறம் மறவற்க!


இரா. பானுகுமார்,
சென்னை 61

Friday, December 28, 2007

இல்லற இயலும் சமணமும்

சமண அவதூறுகள் 2

இல்லற இயலும் சமணமும்!


சமணம் இல்லறத்தை வெறுத்தது! - அவதூறு 2


சமணத்தை நோக்கி வீசப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. ஏன் மெத்தப் படித்தவர்களையும் மயங்க வைத்த கேள்வியும் இதுதான். சமணத்தை முடக்கவும், பாமர மக்களை மயங்க வைக்கவும் சமணத்தை எதிர்த்தவர்கள் எடுத்துக் கொண்ட முக்கிய ஆயுதம் இதுவென்றால் அது மிகையல்ல. சமணம் இல்லறத்தை வெறுத்தது, சமணத்திற்கும் இல்லறத்திற்கும் வெகு தூரம் என்று சொல்லி சொல்லியே ஆட்சியை பிடித்த சமயங்கள் பல உண்டு. ;-)


சமணம் இல்லறத்தை வெறுத்ததா?

உலகியல் ஒழுக்கங்களை அல்லது உலக இயல்பை இரண்டு அறங்களாகப் பிரித்துப் பார்க்கிறது சமணம். இந்திய சமயங்களில், முதன் முதல் “இல்லறம்”, “துறவறம்” என்றும் தனி தனியே ஒழுக்கங்களை எடுத்தோம்பிய சமயம் சமணமாகத்தான் இருக்கும்!

மக்களை நன்வழிப் படுத்தி அவர்களை பாங்குற வழிநடாத்தி செல்ல “சிராவக தர்மம்” என்னும் இல்லற தர்மத்தை வகுத்துக் கொடுத்து, உலக இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகப்பற்றைத் துறந்து வீடுபேறடைய “யதி தர்மம்” என்னும் துறவற தர்மத்தை வகுத்துக் கொடுத்து வழங்கியது சமணம் என்றால் அது மிகையல்ல!


“இல்லறம் ஏனைத் துறவறம் என்றிவற்றைப்
புல்ல உரைப்பது நூல் - அருங்கலச் செப்பு (60)


வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும் - அஃதாவது, உலக முதல் முனைவனான “ஆதிபகவனால்” அருளப்பட்டது முதல் நூலாகும். மேலே காட்டியப் பாடல் சொல்வதுப் போல் அவ்வாறு அருளப்பட்ட நூல் இல்லறமும், துறவறமும் ஆகிய இரண்டு அறங்களையும் கொண்டு விளங்கும் என்றும் அறிவுறுத்துகிறது. இதுப்பற்றி மேலும் அறிய என்னுடைய தொல்காப்பியர் என்னும் கட்டுரையைப் படிக்கவும்.

இவ்வாறு ஆதிபகவன் இரு அறங்களையும் அருளியதோடு அல்லாமல் அவ்வாறு நடந்துக் காட்டினார். இல்லறத்தின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய பின் துறவறத்தை மேற்கொண்டார் என்றும் கீழே வரும் பாடல் குறிக்கிறது.


“மன்னுயிர் காத்தலான் மனம்விட்டு அருளினொடு
இன்னுயிர் உய்கஎன இல்லறமும் இயற்றினையே
புன்மைசால் அற நீக்கிப் புலவர்கள் தொழுது ஏத்தக்
தொன்மைசால் குணத்தினால் துறவரசாய்த் தோற்றினையே”
- யாப். விருத்தி (சூ. 84)


“ஆதியாய் உலகியல்பை அளித்தாய் நீயே!” - தோத்திரத் திரட்டு.


மேற்கூறியப் பாடல் மூலம் ஒன்று புலப்படுகிறது. உலகிற்கு முதன் முதலாய் இல்லறம், துறவறம் என்று வகுத்துக் கொடுத்தது அருக கடவுளான “ஆதிபகவன்” என்று அழைக்கப்படும் “ஆதிநாத”ரே என்பதும் பெறப்படுகிறது.


இரண்டு அறங்களும் ஒன்றே!


“பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம் (35)

வாழ்க்கைக்கு தேவையான செல்வங்கள் பெற்று, அதை பலரும் பயன்பெற பகுத்துத்தந்து கூடி வாழும் இல்லறமும், முற்றுந்துறந்து, தவநிலை தவறாமல் நிற்கும் துறவறமும் ஒன்றுதான் என்று மேலே கூறியப் பாடல் சொல்கிறது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம். “சீவகசிந்தாமணி” என்னும் ஒப்பற்ற காவியம் பாடிய “திருத்தக்கதேவர்“ அவர்கள் அருளிய “நரிவிருத்த’த்தில் தான் மேலே கூறியப் பாடல் வருகிறது.

அம்மட்டோ,


“வினைகாத்து வந்த விருந்துஓம்பி நின்றான்
மனைவாழ்க்கை நன்று தவத்தின் - புனைகோதை
மெல்லியல் நல்லாளும் நல்லள் விருந்துஓம்பிச்
சொலெதிர் சொல்லாள் எனில்” - அறநெறிச்சாரம் (157)

இல்லறத்தின் தர்மத்தைக் காத்து, வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தினரை நோக்கி காத்திருக்கும் இல்லறத்தானின் இல்வாழ்க்கை உயர்த் தவத்தினை விட சிறந்தது என்று மேலே கூறப்பட்டப் பாடல் கூறுகிறது.

எங்கே மனதைத் தொட்டு சொல்லுங்கள், மேலே கூறியப் பாடலகளில் திருக்குறளின் சாயல் தெரியவில்லை?. திருக்குறளின் 47 & 48 ஆவது குறட்பாக்களை இங்கே நினைத்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.

மேலே கூறியப் பாடல்களின் மூலம் பகுத்துண்டு பல்லூயிர் ஓம்பும் இல்லறமும், ஒழுக்கம் மாறா தவநிலைத் துறவறமும் ஒன்றே என்பது பெறப்படுகிறது.

கட்டுரையை முடிக்கும் முன் கீழே வருவனவற்றை கொஞ்சம் படித்து வையுங்கள். :-)




சமணமும் தமிழும் (பக்கம் 28)

“தேவாரம், நாலாயிரப்பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய சமண சமயமல்லாத நூல்களை மட்டும் படித்தவர்கள், சமணர்கள் என்றால் ஆடையின்றி அம்மணமாக இருப்பார்கள் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர், சைவசமய நூல்களை நன்கு கற்றவர். சென்னையில் இந்நூலாசிரியரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ‘இப்போது சமணர்கள் இருக்கிறார்களா? உடை உடுத்தாமல் அம்மணமாகத்தானே இருக்கிறார்கள்?’ என்று கேட்டார்.

“நீங்கள் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தேவாரம் முதலிய நூல்களைப் படித்திருப்பதனால் இவ்வாறு சொல்கிறீர்கள். அந்நூல்களில் கூறப்பட்ட சமண சமயத்துறவிகள் மட்டுந்தான் அம்மணமாக இருப்பார்கள். அதிலும், மிக உயர்ந்த நிலையடைந்த துறவிகள் மட்டும் அவ்வாறு இருப்பார்கள். மற்றைய இல்லறத்தார் ஆணும் பெண்ணும் நம்மைப் போன்றுதான் உடை உடுத்தி இருப்பார்கள்” என்று கூறியபோது அந்த நண்பர், ‘அப்படியா” என்று அதியப்பட்டார்” என்று மயிலையார் எழுதியிருக்கிறார்.


முடிபு

இப்படித்தான் இருக்கிறது இன்றைய தலைமுறையினரின் சமணப் பற்றியப் புரிதல்.
இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று, திருக்குறளில் காமத்துப்பால் சொல்லப்பட்டிருக்கிறது, அதனால், திருக்குறள் சமண நூலாக இருக்க முடியாது என்பார்கள். அவர்கள் காமரசம் சொட்ட சொட்ட எழுதப்பட்ட “சீவக சிந்தாமணி” யை மறந்துவிட்டார்கள் போலும்; திருத்தக்க தேவர் என்னும் சமண பெரியார் அன்றோ அந்நூலை வடித்தது? தங்கள் வசதிக்காக மறந்துவிடுகிறார்கள்! :-)


யான், இணைய அன்பர்களுக்கும், மற்ற சகோதர நண்பர்களுக்கும் கூறுவது யாதெனின்? சமணத்தை நேரடியாகப் படியுங்கள். சமணத்தைப் பற்றிய அறிய நிறைய தமிழ் நூற்கள் உண்டு. குறிப்பாக, இல்லற தர்மத்தை அறிய, அறநெறிச்சாரம், அருங்கலச் செப்பு போன்ற நூற்கள் உதவும்.


அறம் மறவற்க; அறமல்லது துணையில்லை!!

இரா.பானுகுமார்,
சென்னை 61

Thursday, November 29, 2007

சமண அவதூறுகள் - 1

சமண அவதூறுகள் - 1

தேனினினும் இனியது நம் தமிழ் மொழி. அம்மொழியின் வளர்ச்சிக்கு
அரும்பாடுப்பட்டோர் பலர். அவர்களுள் சமணர்கள் தனித்துவம்
மிக்கவர்கள். ஆம். தமிழின் இனிமையைத் தனியாய் உணர்ந்தவர்கள்
அவர்கள். இதனாற்றான் ஒரு புலவன்,

"கொல்லா விரதம் பூண்ட நலத்தோர்
அறிவால் நிறைந்த அறமாண்புடையோர்
தமிழினிதருமை தனியா யுணர்ந்தோர்
கருவிநூற் காவியம் கழறும் பெரியோர்
கால கதியாற் கடை நிலைப்படுவோர்
தம் வயப்படுவது சமணகாலம்
" - தனிப் பாடல்

அந்தச் சமண காலத்தில் எழுந்த தமிழ் நூற்கள்தான் எத்தனை!
எத்தனை!! ஐம்பொரும் காப்பியங்களில் மூன்றையும்,
ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஐந்தையும் வழங்கி தமிழன்னைக்கு
அழகுப் பார்த்தது சமணம்! அதுமட்டுமா? தமிழுக்கு முதல் முதல்
இலக்கணம் (தொல்காப்பியம்) கண்டது சமணமே. அவ்வளவு ஏன்?
நாம் இப்போது பயன்படுத்துவதும் சமண இலக்கணமே!!
(நன்னூல்).

இவையனைத்தும் நமக்கு அருளினோர் சமணர்களேயாவர்.
அதுவும் பிறப்பால் தமிழ்ச் சமணர்கள். இவர்களுக்கு தமிழ்
நாட்டில் விளைந்த இன்னல்கள் ஏராளம்! ஏராளம்!! எதற்காக
இந்த இன்னல்கள்? அதற்கு நிறைய காரணங்கள் இருந்த
போதும், மிக முக்கியமானதாக ஒரே ஒரு காரணத்தை கூறுவோம்!


அந்த முக்கியக் காரணம். வைதிக வேதத்தை எதிர்த்ததுதான்.
வேதத்தை ஏன் எதிர்க்கவேண்டும்? யாகம் என்ற பெயரால்
அப்பாவி உயிர்களை பலியிட்டது வைதிக வேதம். யாகத்தில்
மிருகங்கள் பலியிடுவதன் மூலம் அவை நற்கதியே அடைகின்றன
என்று அச்செயலுக்கு அவை நியாயமும் கற்பிக்க முனைந்தன.

இதனை எதிர்த்து எழுந்ததுதான் தமிழ்மறை!


"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
" - திருக்குறள் (259)


சமணம் உயிரின்பாற்ப் பட்டது. எல்லா உயிரும் ஒன்றே! உயிர்களில்
ஏற்றத் தாழ்வுகள் இல்லை. உயிர்கள் தங்கள் தங்கள் செயல்களினாலே
உயர்வும், தாழ்வும் அடைகின்றன. பிறப்பினால் உயர்வு தாழ்வை
அவை என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை.


"பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்.." - திருக்குறள் (972)

என்றும்,


"பறையன் மகனெனினும் காட்சி யுடையான்
இறைவன் எனஉணரற் பாற்று
" - அருங்கலச் செப்பு (37)


என்றது. நீலகேசி,(கி.பி. நான்காம் நூற்றாண்டு) என்னும் நூலில்
இதுப்பற்றி கூறியதைப் படித்துக் கொள்க.


சுருக்கமாக, சொல்வோமானால் சமணம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது!
வேதமதம் வேளாளச் சைவத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு
சமண மதத்தை அழிக்கத் தலைப்பட்டது. சமணத்தைப் பற்றிய
அவதூறுகளை மக்களிடையே பரப்பப்பட்டன. இப்பொய் பிரசாரத்தை
மக்களும் நம்பலானார்கள். சமணர்கள் எழுதிய நூற்கள் அழிக்கப்பட்டன.
அவர்களுடைய நூற்கள் பிற சமய நூற்கள் ஆக்கப்பட்டன. அருகக்
கடவுள் வாழ்த்து விநாயகர் வாழ்த்தாக மாற்றப்பட்டது. அருகன்
கோயில்கள் சைவ, வைணவ கோயில்கள் ஆயின. இதில் வேடிக்கை
என்னவென்றால்? அதாவது, வேதமதம், சமணத்தை அழிக்க
சைவமதத்தை கூட்டு சேர்த்துக் கொண்டது என்று சொன்னேன்.
இல்லையா?

சமணம் வீழ்ந்ததும், வேதமதம் சைவத்தை அழித்தது. சைவ
வேளாளர்கள் தாழ்ந்துப் போனார்கள். சைவர்கள் நிறுவகித்து வந்த
கோயில்கள் வேதமதத்தினர் தம் வசப்படுத்தினார்கள். சைவ
வேளாளர்கள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு
துரத்தப்பட்டார்கள். உதாரணம்: சிதம்பரம் கோயில்.


சரி. விடயத்திற்கு வருவோம். சமணத்தைப் பற்றிய அவதூறுகள்
என்னென்ன? அவைகள் உண்மைதானா? அதற்கு ஆதாரம்
என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வது தான்
இக்கட்டுரையின் நோக்கம்.


சமண மதம் நாத்திக மதம் - அவதூறு ஒன்று!

சமண மதம் நாத்திகமா?

இந்த கேள்வியை தற்போதைய வலைஞர்களை கேட்டால்
பெரும்பாலோர் நாத்திகம் என்றுதான் பதில் அளிப்பார்கள்.
அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நடைபெற்று வந்த
பிரசாரத்தின் வலு அப்படி.


சமணம் ஆத்திகமே!


சமணம் இறைவனை, இறைமையை (இறைத்தன்மை) ஏற்றுக்கொள்ளும்
மதமே. அவ்வகையில் அது ஆத்திக மதமே!

சமணம் உயிரின்பால் பட்டது என்பதை முன்னமே சொன்னேன்.
எந்த ஒரு ஆன்மாவும் சுயரூபத்தில் இறைவன்தான். ஆனால்,
அவைகள் வினைத்துகள்களால் அழுத்தப்பட்டு தன்னிலை மறந்து
மடமையில் ஆழ்ந்திருகின்றன.

எந்த ஒரு ஆன்மாவும் முயன்றால் இறைவனாக முடியும்.

"தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானும் தான்நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான்
" - அறநெறிச் சாரம் (77)


ஆனால், அது கர்த்தா வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
அஃதாவது, இவ்வுலகை யாரொருவரும் படைத்திலர்;
யாரொருவரும் காப்பவரும் அல்லர்; யாரொருவரும்
அழிப்பவரும் அல்லர்.

சற்று பொறுங்கள். கர்த்தா வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா?
அப்படியானால், அது நாத்திக மதம்தானே? என்று யாராவது
கேட்டலாம். இந்தியச் சமயங்கள் தவிர வேறு எந்த சமயமும்
இக்கேள்வியை கேட்டிருந்தால் யான் நாத்திக மதம் என்றுதான்
கூறியிருப்பேன். ஏன்னென்றால் அவர்கள் கூற்றுப்படி கர்த்தா
வாதத்தை ஏற்காத எந்த மதமும் நாத்திகம்தான். ஆனால்,
இந்திய மதங்களைப் பொருத்தவரை நாத்திகம் என்ற பேச்சுக்கே
இடமில்லை. இந்தியப் பழஞ்சமயங்களில் சரிபாதி நாத்திக
சமயங்கள்தான். தெரியாதவர்கள், தெரிந்தவர்களை கேட்டு
தெரிந்துக் கொள்ளுங்கள் :-)

பின் ஏன் சமணம் நாத்திகம் என்று ஏளனப்படுத்தப்பட்டது?
ஏன்னென்றால் சமணம் வேதத்தை எதிர்த்தனால்தான், சமணம்
நாத்திக மதம் என்று முத்திரைக்குத்தப்பட்டது. திராவிட சிசு
என்றழைக்கப்பட்ட திருஞான சம்பந்தர் பாடிய தேவாரமும்,
பெரியப் புராணமும்தான் அதற்கு சாட்சி. அங்கே படித்துத்
தெரிந்துக் கொள்ளுங்கள்.

காட்டுக்கள் சில:

"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில்லி அமனோடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
"

"வேட்டு வேள்வி செய்யும் பொருளை விளி
மூட்டு சிந்தை முரட்ட மண் குண்டரை
ஒட்டி வாது செய்யத் திருவுள்ளமே
"

"அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் சிரங்களை
சிந்தவாது செயத் திருவுள்ளமே
"

என்று சிவபெருமானை அழைக்கிறார்!


இரா.பானுகுமார்,
சென்னை.